இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமையை அரசு மறுக்க முடியாது

- மாலைதீவுக்கு SLMC தலைவர் ஹக்கீம் கடிதம்

கொவிட் - 19 தொற்றுக்குள்ளான ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம். இவ்வாறு இலங்கையிலுள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். அதனை அவர் தமது டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளதோடு, மாலைதீவின் வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீதிற்கும் அவர் அதனை மீள்பதிவேற்றம் செய்துள்ளார்.

இங்குள்ள மாலைதீவு உயர் ஸ்தானிகருக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலின் விபரம் வருமாறு, நேற்றைய ஆங்கில பத்திரிகையில் கொவிட் - 19 காரணமாக உயிரிழப்போரை நல்லடக்கம் செய்வதற்கு மாலைதீவு முன்வந்திருப்பது குறித்த செய்தியை வாசித்த பின் இக்கடிதத்தை எழுதத் தோன்றியது. எமது சமூகத்தின் மீது தங்கள் நாட்டு அரசாங்கத்திற்குள்ள அனுதாப உணர்வு தாராள சிந்தையின் வெளிப்பாடாகும். அதனால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டு ஜனாதிபதி சொஹ்லிக்கும், மாலைதீவு குடியரசு மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியறிதலைக் கூறிக் கொள்கின்றோம். ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தங்கள் நாட்டின் சபாநாயகர் நஷீட் மற்றும் அவரது பாராளுமன்ற சகாக்களுடனும் ஏனைய பலருடனும் நட்புறவை பேணி வருபவன் என்ற விதத்திலும் இந்நாட்டு முஸ்லிம்களை ஆறுதல்படுத்த மேற்கொள்ளும் எத்தனத்தையிட்டு பாராட்டு தெரிவிப்பது எனது கடமையாகும்.

எவ்வாறாயினும், இறுதிக்கிரியை வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு, எமது அரசாங்கம் நடந்துகொள்வதை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி வருகின்றோம்.

சகிப்புத் தன்மை மற்றும் பிரஜைகள் ஒவ்வொருவரினதும் மத நம்பிக்கைகளின் பெறுமதிக்கு மதிப்பளிக்க வேண்டிய இந்நாட்டில் முஸ்லிம்களான எங்களை ஓரங்கட்ட எத்தனித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், அத்தகைய தீய சக்திகளுக்கு இரையாகிவிடாமலும், தேசத்தை துருவப்படுத்தலுக்கு உள்ளாக்கிவிடாமலும், பாதுகாப்பதற்கு நாம் திடவுறுதி பூண்டுள்ளோம்.

Wed, 12/16/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை