அவசரமாக கூடிய மு.கா உயர்பீடம்; 20 ஐ ஆதரித்தோர் குறித்து ஆராய்வு

- 30க்கு முன்னர் எழுத்து மூலம் விளக்கமளிக்க கோரிக்கை

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் உரிய காரணங்களை எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென நேற்றைய அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடம் முழுமையாக ஒன்று கூடுவது சாத்தியமில்லையென்பதால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய
கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் தாம் அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணங்களை வாய் மூலமாக கூறினர். இதுபற்றி ஆராயப்பட்ட போது கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்வதற்கு, உரிய காரணங்கள் எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர், பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும்.

Mon, 12/14/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை