நீதிமன்ற தீர்ப்புகளை பாராளுமன்றத்தில் விமர்சிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது

நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமை

பிள்ளையான் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு நியாயமானது. மக்களின் நம்பிக்கையை இல்லாமலாக்கும் வகையில் நீதிமன்றத்தின் மீது விரல் நீட்டுவது பயங்கரமான விடயமாகும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிமன்ற தீர்ப்புக்கள் குறித்து பாராளுமன்றத்தில் விமர்சிப்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். நீதிமன்ற சுயாதீன தன்மையை பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர். அதற்காக அவரவருக்கு தேவைக்கமைய தீர்ப்புவழங்க நீதிமன்றங்களுக்கு கடமையில்லை. அண்மைக்காலத்தில் நீதிமன்றங்களால் அதிகமான வழக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை தெரிவுசெய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு அல்ல.

கடந்த 5 வருடத்தில் நீதிமன்ற துறைக்கு பாரிய அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெற்றன. பொலிஸ் கட்டளைச்சட்டத்துக்கு முரணாக நிதி குற்றப்புலனாய் பிரிவு ஆரம்பித்தார்கள். பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் திணைக்களம் அமைக்கமுடியாது. அதனை அதற்கு சம்பந்தமான அமைச்சரே மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று ஊழல் ஒழிப்பு பிரிவு என்ற ஒன்றை அமைத்து, அதனை அரசியலாக்கி, நபர்களை தெரிவுசெய்து பொய் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்குகள் தற்போது விசாரணைக்கு வரும்போது, முறையான சாட்சிகள் இல்லாததனால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அது சாதாரண விடயம்.

மேலும் அண்மையில் வழங்கப்பட்ட லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக இருந்த வழக்கு தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்தில் பாரியளவில் விமர்சிக்கப்பட்டது. அது சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். சட்டத்தின் பிரகாரம் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் மக்களின் நம்பிக்கையை இல்லாமலாக்கும் வகையில் நீதிமன்றத்தின் மீது விரல் நீட்டுவது பயங்கரமான விடயமாகும். நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பதற்கு முன்னர் அது தொடர்பான தீர்ப்புகள் குறித்து வாசித்துப் பார்க்க வேண்டும்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் வழக்கு தீர்ப்பு தொடர்பாகவும் பாரிய விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவருக்கு எதிரான நபர் ஒருவர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் 5 வருடம் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் மேன் முறையீட்டு நீதிமன்றம் அந்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராகரித்துள்ளது. அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துக்கு பின்னர் பிள்ளையான் எம்.பிக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை. அதனால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருக்கின்றது.

எனவே ஜனநாயகத்தின் பிரதான மூன்று தூண்களில் ஒன்றாக இருக்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். நீதிமன்றங்களை விமர்சித்து, நீதிமன்றம் குறித்து மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இல்லாமலாக்க வேண்டாம் என்றார்.

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை