ஊடகத்துறையில் 55 வருடமாக தொடரும் வெற்றிப் பயணம்

அகவை எண்பத்தைந்தில் காலடி பதிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஷண்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், 1955 இலிருந்து கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள ‘ஷண்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற மூத்த பத்திரிகையாளர் ஷண்முகராஜா இன்று அகவை எண்பத்தைந்தில் அடியெடுத்து வைக்கிறார்.

1940 களில் தனது ஆரம்பக் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் (அன்றைய காலகட்டத்தில் சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்) அதற்கடுத்து யாழ். மத்திய கல்லூரியிலும் பயின்ற ஷண், 1964 ஆம் ஆண்டு பத்திரிகைப் பயணத்தை ஆரம்பித்தார். முன்னாள் தினகரன் ஆசிரியர் வி. கே. பி. நாதனை ஆசிரியராகக் கொண்டு எம். டி. குணசேனாவின் இன்டிபென்டன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட்டிலிருந்து வெளிவந்த ‘ராஜா’ சஞ்சிகை மூலம் பத்திரிகைத் துறைப் பயணத்தை அவர் ஆரம்பித்தார்.

1996 ஆம் ஆண்டு அதே பத்திரிகை ஸ்தாபனத்திலிருந்து அமரர் எஸ். டி. சிவநாயகத்தைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி, சிந்தாமணி, சூடாமணியிலும் பணியாற்றியவர் அவர். கடைசியாக வீரகேசரியிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். இன்றும் கூட இவரது ஆக்கங்கள், சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றுவதன் மூலமாக ஷண், சஞ்ஜயன், அன்டர்ஷண் என்ற புனைபெயர்களில் வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அகவையில் எண்பத்தைந்தைக் கண்டவர், பத்திரிகைச் சேவையில் ஐம்பத்தைந்தை தாண்டியுள்ளார். இன்றும் தொடர்கிறது இவரது ஊடகப் பயணம்.

2008 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி, வாழ்நாள் நீண்ட காலப் பத்திரிகைத்துறைச் சேவைக்காக இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கைப் பத்திரிகை மன்றமும் இணைந்து மவுண்ட்லெவனியா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் 10 ஆவது வருடாந்த விருது வழங்கும் விழாவில் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட ஷண், 2015 ஆம் ஆண்டுக்கான 31 ஆவது கலாபூஷணம் அரச விருது வழங்கும் விழாவிலும் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

–சுரேஷ்

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை