20 ஆவது திருத்தம் எந்த சிக்கலும் இல்லை

சர்வஜன வாக்கெடுப்புக்கு தேவை ஏற்படாது என்கிறார் பிரதமர்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த த்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் 20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து தொடர்பில் வினவினர். அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகவும் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்தோடு இணைந்துள்ள கட்சிகளும் குழுக்களை நியமித்துள்ளனவே? என ஊடகவியலாளர்  ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அனைத்து கட்சிகளுக்குமே அது தொடர்பில் குழுக்களை அமைப்பதற்கு உரிமை உள்ளது. எனினும் இறுதியில் நாம் அனைவரும் ஒரே தீர்மானத்துக்கு வருவோம். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாம் அனைவருடனும் அமைச்சரவையில் கலந்துரையாடியுள்ளோம். அது தொடர்பில் எதிர்க்கட்சியும் குழு ஒன்றை நியமித்துள்ளதாக அறிய முடிகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இதேவேளை நேற்றைய அமைச்சரவை முடிவை அறிவிக்கும் செய்தியாளர் மாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவையின் இணை பேச்சாளர் உதய கம்மம்பில கூறுகையில்,

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக் கூடிய காரணிகள் இருந்தால் அவற்றை நீக்கியே அதனை நிறைவேற்றுவோம் என்பதுடன், குழுநிலை விவாதத்தின் போது எவர் வேண்டுமானாலும் திருத்தங்களை சமர்ப்பிக்க முடியுமென தெரிவித்தார். அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு....

20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா? என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது என்றார். இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின்போது 13ஆவது திருத்தத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து பிரதமரிடம் கேட்டபோது,

தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம் என்றார். புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரவுள்ளீர்களா? என கேட்டபோது, அமைச்சர் உதய கம்மன்பில பதிலளித்தார்.

புதிய அரசியலமைப்பு வரைவொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றார். இந்தக் கேள்விக்கு பிரதமரும் பதிலளிக்கையில், அரசியலமைப்பு முழுவதும் மாற்றம் செய்யப்படின் வாக்கெடுப்பிற்கு செல்வது அவசியமாகும். ஆனால், எமக்கு அந்த மக்கள் ஆணை தெளிவாக கிடைக்கப் பெற்றுள்ளது என்றார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: 19ஆவது அரசிலமைப்பை நீக்க வேண்டும் என்றே எமக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அது குறுகிய கால தீர்வு. புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவது நீண்ட கால தீர்வாக அமையும்.

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வு பெற போவதில்லை.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை என்று ஒரு தரப்பு கூறும்போது, 20இற்கு 20 எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பிரதமர்: எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கியுள்ளனர். கட்சிகளுக்கும், தனி நபர்களுக்கும் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட கூடும். எமக்கு நிலையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்றது. அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ஊடகவியலாளர்: கொவிட்-19 காரணமாக உலகின் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது? வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியுமா?

பிரதமர்: உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் என்ன இடம்பெற்றாலும் உரிய நேரத்திற்கு கடன்களை செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: தேங்காய் குறித்து ஒரு பாரிய பிரச்சினை காணப்படுகிறது.

பிரதமர்: தேங்காய் தொடர்பில் எப்போதும் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டது. எமக்கு நுகர்வோர் முக்கியம். அதனால் கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான முன்மொழிவு சிறப்பானதாகும். அதனை முறைப்படி அமைச்சரவையில் முன்வைப்போம்.

ஊடகவியலாளர்: அரசாங்கம் வர்த்தமானி வெளியிடுகிறது. பின்னர் மீண்டும் திரும்பப் பெற்று கொள்கிறது என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

பிரதமர்: அதன் மூலம் வெளிப்படுவது ஜனநாயகமே தவிர வேறொன்றும் இல்லை. தேங்காய் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அது குறித்து அறிவிப்பேன்.

ஊடகவியலாளர்: வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன.

பிரதமர்: உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யுமாறு கூறியுள்ளோம். உதிரிப் பாகங்களை கொண்டுவருவதில் எவ்வித தடங்கல்களும் இல்லை.

ஊடகவியலாளர்: விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?

பிரதமர்: கொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டே அதனை செயற்படுத்த வேண்டும். நாம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை என்பவற்றை கருத்திற் கொண்டு அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்து கொள்ளும் செயற்பாட்டின் போது வதிவிடம் குறித்த பிரச்சினை காரணமாக பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்படாமல் நியாயமற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமைச்சர் விமல் வீரவன்ச: அமைச்சரவையில் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தேர்தல் பட்டியலில் பெயர் பதியப்பட்டிருப்பது போதுமானது என்று சுற்றறிக்கையில் திருத்தம் செய்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்: எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்தினால் இரகசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா?

பிரதமர்: எம்.சி.சி. தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை. இதுவரை அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இடம்பெறாத நிலையில் அப்படியொரு பிரச்சினை குறித்து ஏன் பேச வேண்டும்?

ஊடகவியலாளர்: 20இற்கு ஆதரவாக கைகளை உயர்த்துவதற்கு அரசாங்கத்தில் இணைத்து கொள்வதற்கு உறுப்பினர்களுக்கு பதவிகளை வழங்குவீர்களா?

பிரதமர்: எமக்கு 150 காணப்படுகிறது. பதவிகளுக்காக வரும் உறுப்பினர்கள் தற்போது இல்லை. இதனையும் சொல்ல வேண்டும். நான் என்றால் 19இற்கு வாக்களிக்கவில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச: 20இற்கு எதிர்ப்பு தெரிவிக்க பாராளுமன்ற எதிர்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் யார் என்று தேடிப்பார்த்தால் எமக்கு யார் ஆதரவு வழங்குவார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை?

பிரதமர்: அது எனது கவனத்திற்கானதொன்று. (சிரிப்புடன்)

அமைச்சர் விமல் வீரவன்ச: குழுவின் பரிந்துரைகள் கிடைத்தன. அவை கலந்துரையாடப்பட்டு, பிரதமரின் திருத்தங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஒருமித்த கருத்தொன்றை எட்டியுள்ளோம்.

ஊடகவியலாளர்: போதைப்பொருள் வர்த்தகம் சமூகத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வொன்று எடுக்கப்படுமா?

பிரதமர்: நாம் இந்த ஆபத்து குறித்து அறிந்து சோதனைகளை ஆரம்பித்துள்ளோம். தற்போது இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிய மட்டத்திலானோரே சிக்குகின்றனர். இதில் பிரதானமானவர்களையே கைது செய்ய வேண்டும். நாம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம். அவர்களை கைது செய்வதன் மூலம் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க முடியும்.

ஊடகவியலாளர்: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது அமைச்சர்களினால் பணிகள் இடம்பெறாத காரணத்தினாலா?

பிரதமர்: அப்படி ஒன்றும் இல்லை. ஜனாதிபதி கிராமங்களுக்கு பயணிப்பது என்பது இன்று நேற்று இடம்பெற்ற விடயமல்ல.

அமைச்சர் விமல் வீரவன்ச: ஜனாதிபதி கிராமந்தோறும் பயணிப்பது தவறான விடயமா?

ஊடகவியலாளர்: மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றதா?

பிரதமர்: அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சட்டத்திற்கு அமையவே சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த: கடந்த அரசாங்கம் போன்று நாங்கள் நீதிமன்ற செயற்பாடுகளில் தனிப்பட்ட தலையீடுகளை மேற்கொள்ள மாட்டோம்.

அமைச்சர் விமல் வீரவன்ச: முந்தைய அரசாங்கம் ஊழல் தடுப்பு குழுவொன்றை நியமித்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்கி. அதற்காக ரூபாய் 3 கோடி செலவிடப்பட்டது. அதன்படி ஊழல் தடுப்பு குழுவினாலேயே ஊழல் செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் அவரை நியமித்தவர்களே பொறுப்பு கூற வேண்டும்.

ஊடகவியலாளர்: பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட இன்று அமைச்சு பதவிகளிலுள்ள பலர் வீணாக சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பீர்களா?

பிரதமர்: தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் எதுவும் சிந்திக்கவில்லை. நாம் ஒன்றுக்கு ஒன்று செய்யும் விருப்பம் கொண்டவர்கள் அல்லர். நாம் ஒருபோதும் பழிவாங்கியதில்லை. இச் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மம்பில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.அசோக்குமார், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை