20 ஐ எதிர்த்து இதுவரை 39 மனுக்கள் தாக்கல்

நேற்று மட்டும் 19 மனுக்கள்

20 ஆவது திருத்தத்தை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட மேலும் இரண்டு பேரால் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதான பரிசீலனை செப்டெம்பர் 29 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இன்று வரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை