வன்டேஜ் உதைபந்தாட்ட தலைவர் கிண்ண கால்பந்து: புளூ ஈகல்ஸ், கொழும்பு அணிகள் வெற்றி

வன்டேஜ் உதைபந்தாட்ட தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் ஈ குழுவுக்காக சனிக்கிழமை (14) இடம்பெற்ற ஒரு போட்டியில் இபோச அணியை புளூ ஈகல்ஸ் அணியும், கிறிஸ்டல் பெலஸ் அணியை கொழும்பு கால்பந்து கழக அணியும் வெற்றி கொண்டு தொடரில் தமது இரண்டாம் வெற்றியைப் பதிவு செய்து கொண்டன.

சுகததாஸ அரங்கில் இரவு ஆட்டமாக இடம்பெற்ற இந்த மோதலில் ஆட்டம் ஆரம்பமாகி 15 ஆவது நிமிடத்தில் எதிரணி கோல் எல்லையில் தனிமையில் இருந்து பந்தைப் பெற்ற சபீர் பந்தை இலகுவாக கோலுக்குள் செலுத்தினார்.

28ஆவது நிமிடத்தில் கொழும்பு அணி வீரர்களுக்கு எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் கிடைத்த ப்ரீ கிக்கை, சர்வான் தடுப்பு வீரர்களுக்கு கீழால் உதைந்து இரண்டாவது கோலைப் பெற்றார்.

அடுத்த 5 நிமிடங்கள் நிறைவடைவதற்குள் சர்வான் உதைந்த பந்து கிறிஸ்டல் பெலஸ் கோல் காப்பாளர் அக்ரமின் கைகளில் இருந்து நழுவ, வேகமாக அங்கே சென்ற ஆகிப் பந்தை வலைக்குள் செலுத்தினார். இதனால் மேலதிக 3 கோல்களுடன் கொழும்பு கால்பந்து கழக வீரர்கள் முதல் பாதியில் முன்னிலை பெற்றனர்.

ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பெலஸ் பின்கள வீரர் மைக்கல் எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் தாக்கி, நேரடியாக சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் சர்வான் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். பின்னர், மாற்று வீரராக வந்த கிறிஸ்டல் பெலஸ் அணியின் சிரேஷ்ட வீரர் ஐசக் அபா 86ஆவது நிமிடத்தில் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். எனினும், ஆட்டம் முடிவில் கொழும்பு கால்பந்து கழக அணி 4 – 1 என வெற்றி பெற்றது. கொழும்பு அணி தமது குழு நிலை இறுதி மோதலில் புளூ ஈகல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த தொடரில் கொழும்பு அணிக்காக அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் சர்வான் 3 கோல்களுடன் முன்னிலையில் உள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் ஆட்டமாக மாலை இடம்பெற்ற இந்த மோதலின் 32ஆவது நிமிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை அணியினருக்கு கிடைத்த பெனால்டி உதையை சிரேஷ்ட வீரர் சன்ஜீவ் கோலாக்கினார்.

அந்த கோல் பெறப்பட்டு 10 நிமிடங்களில் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து கவிந்து இஷான் வழங்கிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினைக் கொண்டு நெத்ம மல்ஷான் புளூ ஈகல்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். இதனால் முதல் பாதி சமநிலையில் நிறைவடைந்தது. இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் தமது கோல் எல்லையில் வைத்து இபோச அணி வீரரின் கையில் பந்து பட்டமைக்காக புளூ ஈகல்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சதுரங்க பெர்னாண்டோ கோலாக்கி அணியை முன்னிலைப் படுத்தினார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் கவிந்து இஷான் அடுத்த கோலையும் பெற, ஆட்டம் நிறைவில் புளூ ஈகல்ஸ் அணி 3 – 1 என வென்று, தொடர்ந்து தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை