பற்றைக்குள் கூடாரம் அமைத்து பதுங்கி வாழ்ந்த கொள்ளைக்குழு

சினிமாப் பாணியில் பொலிஸாரால் சுற்றிவளைத்து கைது

மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்தநிலையில் கொள்ளைக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் தப்பிசென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் இரவு வேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 5 கொள்ளைச் சம்பவங்கள், பளை, தெல்லிப்பழை, இளவாலை பொலிஸ் பிரிவுகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டமை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.அத்துடன் இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் கொள்ளைக் குற்றச்சாட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் பற்றைக் காணிக்குள் தற்காலிக கூடாரம் அமைத்து மறைந்திருந்த போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதானவர்கள் கட்டுடை மற்றும் நவாலிப் பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடையவர்களே ஆவார்கள்.கைதானவர்களிடமிருந்து வாள் ஒன்றும் 4 பவுண் தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன.

கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களிடம் 2 வாள்கள் மற்றும் 15 பவுண் நகைகள் உள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளையில் ஈடுபட்டால் வேறு ஓர் பிரதேசத்துக்குச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தலைமறைவாகி வாழ்வதாக வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Mon, 08/03/2020 - 06:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை