திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலிண விக்கிரமரட்ன தெரிவித்தார்.
525 வாக்களிப்பு நிலையங்களில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து 05 இலட்சத்து 13 ஆயிரத்தி 979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக, தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 200 வேட்பாளர்களும், 34 சுயேட்சைக்குழுக்களின் 340 வேட்பாளர்களுமாக 540 பேர் 7 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காகப் போட்டியிடுகின்றனர்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் 01 இலட்சத்து 77 ஆயிரத்து 144 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90 ஆயிரத்து 405 பேரும், கல்முனை தேர்தல் தொகுதியில் 77 ஆயிரத்து 637 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 01 இலட்சத்து 68 ஆயிரத்து 793 பேரும் 2019 ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் 181 வாக்கெடுப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இவ் வாக்குகள் எண்ணும் பணிகளுக்காக 74 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 19 நிலையங்களும், தேர்தல் பணிகளுக்காக 55 நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாகவும், கூறினார்.
வாக்குச்சாவடிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு ஒவ்வொரு சுகாதார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
ஒலுவில் விசேட நிருபர்
from tkn