இறுதி நிமிடத்தில் சீ ஹோக்கை சமநிலை செய்த செரண்டிப்

இலங்கை உதைபந்தாட்ட சங்க தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் இடம்பெற்ற போட்டிகளில் ரெட் ஸ்டார்ஸ், டிபெண்டர்ஸ் மற்றும் பொலிஸ் அணிகள் வெற்றிகளைப் பெற்றன. அதேபோன்று, செரண்டிப் மற்றும் சீ ஹோக் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதல் சமநிலையில் முடிவுற்றது.

சீ ஹோக் கா.க எதிர் செரண்டிப் கா.க

சுகததாச அரங்கில் இரவு நேரம் இடம்பெற்ற டி குழுவுக்கான இந்த விறுவிறுப்பான மோதலில் முதல் பாதியில் சீ ஹோக் அணி தமக்கு கிடைத்த பெனால்டியின்போது ஹஸ்மீர் மூலம் கோலைப் பெற்றது. செரண்டிப் அணிக்கு எவன்ஸ் ப்ரீ கிக்கின்போது ஒரு அற்புதமான கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகிய நிமிடமே நாகுர் மீரா மூலம் கோல் பெற்ற சீ ஹோக்ஸ் அணி 52ஆவது நிமிடம் தமது மூன்றாவது கோலையும் பதிவு செய்தது.

தொடர்ந்து எவன்ஸ் செரண்டிப் அணிக்கு அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

ஆட்டத்தின் உபாதையீடு நேரத்தில் எதிரணியின் பெனால்டி எல்லையில் பல வீரர்களிடையே இடம்பெற்ற உதைகளின் பின்னர் தன்னிடம் வந்த பந்தை செரண்டிப் வீரர் சிபான் கோலாக்கி போட்டியை சமப்படுத்தினார்.

ரட்னம் வி.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க

குழு டி யில் அங்கம் வகிக்கும் மற்றைய அணிகளான பொலிஸ் மற்றும் ரட்னம் இடையிலான மோதல் சுகததாச அரங்கில் இடம்பெற்றது. இதன் முதல்பாதியில் அபார ஆட்டம் காண்பித்த எப்.ஏ கிண்ண நடப்புச் சம்பியன்களான பொலிஸ் வீரர்கள் 3 – 1 என முன்னிலை பெற்றனர்.

இதில் இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரர் சதுர குனரத்ன 24ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணிக்காக மத்திய களத்தில் இருந்து உதைந்த ப்ரீ கிக் கோல் போட்டியில் பெறப்பட்ட மிகச் சிறந்த கோல்களில் ஒன்றாக இருந்தது. எனினும் இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற, ஆட்டம் முடிவில் பொலிஸ் 4 – 2 என வெற்றி பெற்றது.

டிபெண்டர்ஸ் கா.க எதிர் சுபர் சன் வி.க

குழு சி இன் மோதலாக சுகததாச அரங்கில் திங்கட்கிழமை (10) மாலை இடம்பெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் டிபெண்டர்ஸ் அணியினர் அசிகுர் ரஹ்மான், மதுஷான் டி சில்வா மூலம் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் அவ்வணிக்கு ப்ரான்க் மற்றும் ராஜவசம் ஆகியோர் தலா ஒரு கோலைப் பெற, போட்டியின் உபாதையீடு நேரத்தில் கிடைத்த பெனால்டியை சுபர் சன் அணியின் மைக்கல் கோலாக்கினார்.

போட்டி நிறைவில் மேலதிக 3 கோல்களினால் டிபெண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ரெட் ஸ்டார்ஸ் கா.க எதிர் சோண்டர்ஸ் வி.க

குழு சி இற்கான மற்றொரு ஆட்டமான குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் (ரேஸ் கோர்ஸ்) இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆதிக்கம் சோண்டர்ஸ் வீரர்களிடம் இருந்தாலும் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை தவறவிட்டமை மற்றும் சந்தேகத்திற்குறிய ஓப் சைட் என்பன அவர்களது வெற்றியைத் தடுத்தன.

ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நிரேஷ் கோலின் வலது பக்க கம்பத்திற்கு வெளியே உதைந்தார்.

எனினும், 41அவது நிமிடத்தில் இஸ்மயில் அபுமெரி ரெட் ஸ்டார் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் நிரேஷ், தனது அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை நேராக கோலுக்குள் செலுத்தினார்.

மீண்டும் 70ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார்ஸ் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது மத்திய களத்தில் இருந்து உதைந்த பந்து கோலுக்கு அண்மையில் இருந்த சக வீரரின் ஹெடரினால் தன்னிடம் வர, அதனை பாசித் அமீர் கோலாக்கினார்.

அடுத்த நிமிடத்தில் ஷமத் ரஷ்மித் வழங்கிய பந்தை நிரேஷ் கோலாக்கிய போது, அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.

இறுதி நிமிடங்களில் சோண்டர்ஸ் வீரர்கள் கோலுக்கான முழு முயற்சியிலும் ஈடுபட்டாலும் அவை தோல்வியில் முடிய ரெட் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

Wed, 08/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை