கொரோனாவை கருத்திற் கொள்ளவும்; நல்லூர் தேர் உற்சவம் குறித்து யாழ். அரச அதிபர் அறிவுரை

கொரோனா சூழ்நிலையை கருத்திற் கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை 17 ஆம் திகதி நல்லூர் ஆலய தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில் தற்போதுள்ள கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

நல்லை தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 18ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

இந்நிலையில் தற்பொழுது பக்தர்கள் அதிகளவில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர் அதேபோன்று போலிசார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார அறிவுறுத்தல்களை பக்தர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். அந்த அடிப்படையிலே சுகாதார நடைமுறைகளை பேணி சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களில் கலந்து கொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

பக்தர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நல்லூர் கந்தனுடைய திருவிழாவில் இலட்சோப இலட்சம் மக்கள் ஒன்று கூடி நிற்கின்ற இடம். ஆகவே இந்த கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த சூழ்நிலையை அனுசரித்து செயற்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது  

இந்த வருட நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் சுகாதார நடைமுறைகளை சமூக இடைவெளியை பின்பற்றி ஆலய உற்சவங்களில் கலந்து கொள்ளுமாறு ஏற்கனவே பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆலயத் தேர் உற்சவத்தை உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்தவாறே காணக் கூடியதாக இருக்கின்றது.  

சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்களும் இந்த இந்த தடவை நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு ஒன்றுகூடி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளாது சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய பிரசன்னத்தை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமித்தி, எஸ். நிதர்ஷன்

Sun, 08/16/2020 - 06:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை