தேர்தல்கள் திணைக்களத்துடன் இணைந்து அனைத்து பொலிஸ் பிரிவுகளும் செயற்படும்

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சி
யாழ்ப்பாணத்தில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண தெரிவிப்பு

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முயற்சிப்பதாக கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் பிரதிநிதியும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார்.  

யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க நாம் வடக்கிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளோம். நானும் பொலிஸ் பேச்சாளரும் வடக்கிற்கு விஜயத்தினை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல்  திணைக்களம் மற்றும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது  தொடர்பில் ஆராய்வதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருக்கிறோம்.  

அதேபோல் வவுனியாவுக்கும் செல்லவுள்ளோம். வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்தவுள்ளோம். அதில்  பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.  

எமக்கு தற்போது உள்ள ஒரு பிரச்சினை கொவிட் 19 வைரஸ் பிரச்சினை  ஆகும். இது நாடளாவிய ரீதியில் உள்ள ஒரு பிரச்சினை. உலக சுகாதார ஸ்தாபனம்  எப்போது கொவிட் 19 இல்லை என அறிவிக்கின்றதோஅன்றுவரை எமக்கு இந்த கொ​ேரானா  வைரஸ் தாக்கம் இலங்கையிலும் காணப்படும்.  

எனவே அந்த நிலையிலும் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது  தொடர்பில் நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம். அதாவது  தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை  பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடாத்த நாங்கள் முயற்சிக்கின்றோம்.  

அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றது. எனவே அனைவரின் ஒத்துழைப்போடும் குறிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது. அதாவது  அனைவரும் 'மாஸ்க்' அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேபோல் சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதார நடைமுறைகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது எமது கோரிக்கையாக இருக்கிறது. தேர்தல் முறையில் எவர் ஈடுபட்டாலும் அது சட்டத்துக்குரிய குற்றம் ஆகும். எனவே அது எவராக இருந்தாலும் தேர்தல் வன்முறையுடன் சம்பந்தப்பட்டு எமக்கு  முறைப்பாடு வழங்கப்படும் இடத்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் அவர் தெரிவித்தார்.  

Tue, 07/14/2020 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை