ஒப்பந்தங்கள் மூலம் இழந்தவை மீளவும் பெறப்படும்

போராட்டத்தை கைவிடமாட்டேன் என்கிறார் - பிரதமர் மஹிந்த

சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் நாடு இழந்த வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதே எனது உறுதிப்பாடென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஒப்பந்தமொன்றிலிருந்து விலகுவது இலகுவான விடயமல்ல. சிரமத்திற்கு மத்தியலாவது நாட்டின் வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தை கைவிட மாட்டேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மஹியங்கனை உட்பட நாடு முழுவதும் விவசாய உற்பத்திகளை அதிகரித்து, உள்நாட்டு சந்தைகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதாக இங்கு பிரதமர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

உலகில் முதல் முறையாக முப்படையினரை ஈடுபடுத்தி கொவிட்- 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை ஜனாதிபதியினாலேயே முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

வளர்ச்சி என கருதப்படும் மேற்கத்திய நாடுகளில் நடு வீதிகளில் மக்கள் உயிரிழக்கும் நிலைமை இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பிரதமர் இதன் போது தெளிவுப்படுத்தினார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ, இந்த நாட்டில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணுவதற்கு முன்னர் செயலணியை உருவாக்கி வைரசை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொண்டமையினால் கொவிட் 19 வைரஸிற்கு இலங்கை முகம் கொடுக்க முடிந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆபத்தான நிலைமை ஒன்று உலக சமூகத்திற்கு காணப்படுவதால் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு பிரதமர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆதரவு வழங்க்க கூடிய பெரும்பான்மை பாராளுமன்றம் இல்லாமை தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டார், அபிவிருத்தி திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய முறையில் பாராளுமன்றம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இம்முறை பொது தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட வெற்றியை பெற்று தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே உட்பட இம்முறை பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பதுளை மாவட்டத்திற்காக போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட குழுவினர் கலந்து கொண்டனர்.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை