வாக்காளர்கள் நீலம் அல்லது கறுப்பு குமிழ்முனை பேனாவை எடுத்து வருவது கட்டாயம்

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளன. அதில் ஒன்றாக வாக்காளர்கள் தமது அடையாள அட்டையை கையில் வைத்து வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு உயர்த்திக் காண்பிக்க வேண்டுமென உதவித் தேர்தல் ஆணையாளர் தேவராசா ஹென்ஸ்மன் தெரிவித்தார். 

மட்டகளப்பில் நடைபெற்ற தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத செயற்குழு அமர்வில் கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

வாக்களிப்பு என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற நிகழ்வு ஜனநாயகத் தேர்தலின் மூலம்தான் உறுதிப்படுத்தப்படும். அந்த அதிகாரம் மக்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. 

எங்களது இறைமையை வெளிக்காட்ட குடிமக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு அரியவாய்ப்புத்தான் தேர்தல். இந்த தேர்தல்களை மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களுமாகச் சேர்த்து 38 அணிகளைக் கொண்ட இரு நிரல் வாக்குச் சீட்டு வருகிறது. 

கட்சிக்கோ அல்லது சுயேச்சைக் குழுவுக்கோ புள்ளடி இடுவதும் வேட்பாளர்களின் 3 பேருக்கு வாக்களிக்க முடியும். வழமை போன்று கட்சிக்கும் அல்லது சுயேச்சைக் குழுவுக்கும் மாத்திரமும் வாக்களிக்கலாம். புள்ளடி தெளிவாக இருக்குமென்பதால் புள்ளடியைத்தான் விரும்புகின்றோம். 

வாக்காளர்கள் நீலம் அல்லது கறுப்பு குமிழ் முனைப் பேனா தம்வசம் எடுத்து வர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பேனாக்கள் வாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படமாட்டாது. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அலுவலர் வழமையாக வாக்காளர் அடையாள அட்டையை தனது கையில் எடுத்து சரிபார்த்து உறுதிப்படுத்துவதுண்டு. 

ஆனால் இம்முறை கொரோனா முற்பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை இருப்பதால் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தல் அலுவலர் வாக்காளரின் ஆளடையாள அட்டையை தனது கையால் எடுத்து பார்த்து உறுதிப்படுத்த மாட்டார். ஆனால் வாக்காளர் தனது ஆளடையாள அட்டையை உறுதிப்படுத்தும் தேர்தல் அலுவலர் தெளிவாக நோக்கும் வண்ணம் வாக்காளர் மிகக் கிட்டிய தூரத்தில் வைத்துக் காண்பிக்க வேண்டும். 

மை பூசுவதும் கூட மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் அதிகரித்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்திலும் தேர்தல் அலுவலரின் கை வாக்காளரின் கை மீது படாது. தூரிகை கொண்டு மை பூசப்படும். ஒருவருக்கு ஒரு தூரிகை என்ற ஒழுங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வாக்காளர் உள் நுழையும் போதும் வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேறும்போதும் கிருமித் தொற்று நீக்கி ஏற்பாடுகள் இருக்கின்றன. அதேவேளை காய்ச்சல் பரிசோதிக்கும் உஷ்ணமானி பரிசோதனை, கைகழுவுதல் எல்லாம் இடம்பெறாது. 

நேர முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு இந்த விடயங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டை, குமிழ் முனைப்பேனா, ஆளடையாள அட்டை இவற்றைத் தவிர வேறேதும் தேவையற்ற பொருட்களை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்து வர வேண்டாம் என வாக்காளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

சமூக இடைவெளி ஏற்பாடுகளும் வாக்களிப்பு நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும். வாக்களிப்பின்போது கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அதிகாரிகள் அலுவலர்கள் மாத்திரம் முழுமையாகச் செயற்படுத்திவிட முடியாது. இந்த விடயத்தில் வாக்காளர்களாகிய பொதுமக்களின் அக்கறை மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

Wed, 07/22/2020 - 05:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை