ஓகஸ்ட் 02 நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு

- அதன் பின்னர் அமைதிக் காலம்

- ஓகஸ்ட் 03 வழங்க இருந்த அனுமதி இரத்து

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதன் பின்னர் தேர்தல் இடம்பெறும் தினம் வரை அமைதிக் காலம் பேணப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் எஸ். ரத்நாயக்க தெரிவித்தார்.

இம்முறை பாராளுமன்ற தேர்தல், 12,985 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள், 71 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

இதற்காக 2,820  வாக்கு எண்ணும் மண்டபங்கள் அமைக்கப்படும் என,  அவர் தெரிவித்தார்.

தேர்தல் கடமைகளில் பொலிஸார் உள்ளிட்ட 3 1/2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக,அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமையுடன் எதிர்நோக்கிய மட்டுப்பாடுகள் காரணமாக வீடு வீடாகச் சென்று வாக்குகளை இரந்து கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் 2020.08.03ஆம் திகதி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், நடைமுறை சட்டத் தடங்கல்கள் காரணமாக, அதனை கைவிட தீர்மானித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. (குறித்த அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது)

எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Thu, 07/30/2020 - 15:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை