தலைவர் பதவி எப்படி கிடைத்தது

விராட் கோஹ்லி

இந்தியக் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் பொறுப்பு எப்படி கிடைத்தது என்பதை விராட் கோஹ்லி விளக்கியுள்ளார்.

இந்திய அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டதில் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு உள்ளதாகவும் கோஹ்லி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய அணிக்குள் நுழைந்ததில் இருந்தே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். எல்லா போட்டிகளிலும் விளையாடும் பதினொருவர் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். டோனியின் அணித்தலைமையில் விளையாடிய போது அவருடன் நெருக்கமாக செயற்பட்டேன். அதாவது அவர் விக்கெட் காப்பாளர் முதலாவது ஸ்லிப்பில் நான் நிற்பேன். அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு யோசனையை சொல்லிக் கொண்டே இருப்பேன். ‘இதை அப்படி செய்யலாம், இந்த மாதிரி முயற்சித்து பார்த்தால் நன்றாக இருக்கும்’ ஏனென்றெல்லாம் ஆட்டம் தொடர்பாக நிறைய யோசனைகளை தெரிவிப்பேன். சிலவற்றை நிராகரித்து விடுவார். சில யுக்திகளை ஏற்றுக்கொண்டு அது பற்றி விவாதிப்பார்.

இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து எனது செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து கொண்டே இருப்பார். இதன் மூலம் தனக்கு பிறகு கோஹ்லியால் அணித்தலைவர் பதவியில் சிறப்பாக செயற்பட முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டது. நானும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ‘டோனி விலகி விட்டார், அடுத்து அணியின் தலைவர் நீங்கள் தான்’ என்று தேர்வாளர்கள் திடீரென சொல்வது போன்ற சம்பவம் எனக்கு நடந்து விடவில்லை. 6-7 ஆண்டுகள் எனது நடவடிக்கைகள், வளர்ச்சியை கவனித்து தான் அணித்தலைவர் பொறுப்புக்கு என்னை டோனி பரிந்துரைத்திருக்கிறார்’ என கூறினார். கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டோனி ஓய்வை அறிவித்த பின்னர், விராட் கோஹ்லி டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2017ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் இருந்து டோனி தனது அணித்தலைவர் பொறுப்பை இராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டுக்கும் கோஹ்லி அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

Tue, 06/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை