ரி 20 உலகக் கிண்ணத்தை நடத்துவது ஆபத்து

ஆஸி. பிரதம நிறைவேற்று அதிகாரி ரொபர்ட்ஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருப்பதாக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் இந்த போட்டிக்காக ஒரே இடத்தில் அத்தனை அணிகளும் கூடுவது சிரமம் என்று கருதப்படுகிறது.

அத்துடன், அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டம்பர் 30 வரை எல்லைகள் மூடப்பட்டு இருப்பதால் வீரர்கள் அங்கு செல்வது கடினம். இதனால் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) மாநாடு வீடியோ மூலம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது.

ஆனாலும், அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் திகதி வரை நிலவும் சூழ்நிலையை பார்த்து அதற்கு தகுந்தபடி முடிவு செய்யலாம் என்று ஐ.சி.சி.யின் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபர்ட்ஸ் நேற்றுமுன்தினம் (29) அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

“ரி 20 உலகக் கிண்ணத் தொடரை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தான் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இருக்கிறோம்.

ஆனால் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இந்த ஆண்டில் இந்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும். ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டால், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு பெரும்தொகை (சுமார் ரூ.400 கோடி) வருவாய் இழப்பை சந்திக்க வேண்டி வரும்.

இந்த ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறிப்பிட்ட காலத்தில் நடக்காவிட்டால், அடுத்த ஆண்டு (2021) பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடந்தாலும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் ரசிகர்கள் வருகை மிகவும் குறைவாகத் தான் இருக்கும்.

வழக்கமாக ரசிகர்கள் வருகையின் மூலம் ரூ.250 கோடி வரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போது ரி 20 உலகக் கிண்ணப் போட்டி நடந்தால் அதன் மூலம் ரூ.100 கோடி கிடைப்பது கூட மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

அத்துடன் இந்த பருவகாலத்திற்கான போட்டிகளை உரிய மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன் நடத்த ரூ.50 கோடி வரை செலவாகும்.

அத்துடன், டிசம்பர் 3ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரை பிரிஸ்பேன், அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். இந்தத் தொடர் நடைபெற்றால் எமக்கு சுமார் 22 கோடி ரூபா வருமானமாக கிடைக்கும். இருப்பினும் போட்டிக்குரிய காலக்கட்டத்தில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி தான் இந்த போட்டி தொடர் நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்படும். தேவைப்பட்டால் அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் கூட நடத்தப்படலாம்” என்று அவர் கூறினார்.

எதுஎவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அணியின் போட்டித் தொடருக்கு இன்னும் காலம் இருப்பதால் அதுபற்றி பிறகு ஆலொசிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 06/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை