நவீனை தொழிற்சங்க தலைவராக்கி தமிழரை அவமானப்படுத்திய ரணில்

மனோ கணேசன் காட்டமான அறிக்கை

தோட்டத் தொழிலாளரின் ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் பெருந்தடையாக இருந்து துரோகம் செய்த நவீன் திசாநாயக்கவை தொழிற்சங்க தலைவராக்கி ரணில் விக்கிரமசிங்க தமிழரை அவமானப்படுத்தியுள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நவீனுக்கு தொழிற்சங்கத்தில் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் நவீனுக்கு உடந்தையாக தானும் இருந்துள்ளதைவெட்கமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் தனது முன்னாள் பிரதமர் பதவிக்கு உத்தரவாதம் வழங்கி ஆட்சியமைக்க பெருவாரியாக வாக்களித்த மலையக மக்களை ரணில் விக்கிரமசிங்க அவமானப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,    

ஐ.தே.வின் கட்சி நியமனங்கள் எங்களுக்கு தேவையற்ற விடயம். அதையிட்டு அக்கறை கொள்ள எங்களுக்கு நேரமும் கிடையாது. ஆனால், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆட்சி அமைக்க அதிகம் வாக்களித்தது, தமிழ் மக்கள் என்பதை அவர் மறக்கக் கூடாது. அதிலும் அதிகபட்ச வாக்குகளை தந்த மாவட்டம் நுவரெலியா மாவட்டம் என்பதையும் அவர் நினைவில் கொள்ள வேண்டும். அவர் மறந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நவீன் திசாநாயக்கா மறக்கக் கூடாது.

பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்து தோட்ட கம்பனிகளின் ஏஜண்டாக செயற்பட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் இந்த நவீன் என்பது நாடறிந்த விடயம்.

அது மட்டுமல்ல, தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடமைக்க காணி தருவதிலும் நவீன் திசாநாயக்க பெரும்  தடைகளை ஏற்படுத்தினார். அரசாங்கத்துக்குள் சண்டையிட்டே இந்த காணிகளை நாம் பெற்று வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்தோம். இந்நிலையில் நவீன் எவருக்கு துரோகம் செய்தாரோ, அதே தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க த் தலைவராக ரணில் விக்கிரமசிங்க அவரை நியமித்துள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். இது நடக்காது. நடப்பது என்னவோ, தமிழ் மக்களிடம் தனக்கு எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் முற்றாக இழக்கிறார்.

Sun, 06/14/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை