மாளிகாவத்தை லக்செத செவன சூடு; நால்வர் கைது

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 30ஆம் திகதி மாலை 5.00 மணியளவில், மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்செத செவன  குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அக்குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (31) சந்தேகநபர் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதோடு, நேற்று (01) அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், மேலும் இரு சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் நேற்று (01) மாலை கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொலன்னாவ மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதிலொரு சந்தேகநபர், குறித்த சம்பவத்தின்போது காயமடைந்ததை அடுத்து, பொலிஸாரின் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர், நேற்றிரவு (01) கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ராஜகிரிய விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேகநபர்கள் மூவரும் இன்று (02) அளுத்கடை இல. 04 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tue, 06/02/2020 - 10:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை