ஆலயங்களின் இட வசதிக்கேற்ப அடியார் கூடி வழிபட ஏற்பாடு

பிரதமரிடம் சிவஸ்ரீ பாபு சர்மா கோரிக்கை

ஆலயங்களில் இடவசதிகளின் பிரகாரம் வழிபாடுகளுக்காக வரும் அடியார்களின் தொகையை அதிகரிக்க வேண்டுமென பிரதமரும் பௌத்தசாசன கலாசார மதவிவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷவிடம் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமரின் இந்துமத இணைப்புச் செயலாளரான பாபுசர்மா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் காத்திரமான நடவடிக்கைகள் சகலரினாலும் போற்றப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் பிரஜைகளாகிய சகலரும் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்க வேண்டும்.குறிப்பாக இந்து மக்களாகிய நாம் எமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதில் மகிழ்வடைகின்றேன்.

இந்நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களில் வணக்கஸ் தலங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இவ் வறிவுறுத்தல்களின் பிரகாரம் வணக்கஸ்தலங்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் வழிபாடுகளுக்காக ஒரு தரத்தில் ஐந்து பேர் மட்டுமே பங்குபற்ற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு ஆலய அறங்காவலர்கள் குருமாரின் வேண்டுகோளுக்கமைவாக, ஆலய இடவசதிகளின் பிரகாரம் இத்தொகையை அதிகரிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளேன்.

இதற்கான சாதகமான பதிலை எதிர்பார்ப்பதுடன் இதன் பிரகாரம் இந்து ஆலயங்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உள்ளடக்கி சுற்றுநிருபம் ஒன்றை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விரைவில் வெளியிடவுள்ளது.

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை