ரவிகரன், சிவாஜிலிங்கம் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா  ரவிகரன்  மற்றும்  எம்.கே.சிவாஜிலிங்கம்  மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற காணி விடுவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனை  கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைகளையடுத்து ரவிகரன்  பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார். இந் நிலையில் சுமார் இரண்டுவருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும்  அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன், அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

அதேவேளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  மன்றிற்கு முன்னிலையாகியிருக்கவில்லை.

இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மன்று அறிவித்தது.

முல்லைத்தீவு விசேட நிருபர்

Tue, 05/19/2020 - 11:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை