ஜாதிக ஹெல உருமய பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் குமார வெல்கம ஆகியோரால், தேர்தல் தொடர்பான வர்த்தமானிகளை சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, மார்ச் 02ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் ஜூன் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஆகிய இரண்டையும் இரத்துச் செய்யுமாறு அவர்கள் தங்களது மனுவில் கோரியுள்ளனர்.
அரசியலமைபுக்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்து இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் ஏற்கனவே 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி சரித்த குணரத்ன, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, பேரசிரியர் அன்டன் மீமண, ஏ.எம். ஜிப்ரி, எஸ். சிவகுருநாதன், மஹிந்த ஹத்தக்க, எச்.டி.எஸ்.எப்.டி. ஹேரத், எம்.எஸ். ஜயகொடி, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
from tkn