திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (09) காலையில் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானைகளின் தொல்லையினால் அப்பகுதியை சுற்றி யானை மின்வேலி பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் மின் வேலியில் மோதியதினாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் திருகோணமலை, வில்கம் விகாரை பாடசாலையில் 03ம் தரத்தில் கல்வி பயிலும் 10ஆம் கட்டை பகுதியைச்சேர்ந்த கவிஷ்க தெனித் சஞ்ஜீவ (08) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவன் யானை மின்வேலியில் மோதியதையடுத்து 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
from tkn