அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் தேவையில்லை

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன தெரிவித்தார்.

இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஊரடங்கு சட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாகனத்திலே அத்தியாவசிய சேவை என மூன்று மொழிகளிலும் எழுதி சுகாதாரப் பிரிவு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைவாக பொருட்களை விநியோகிக்க முடியும்.

அத்தோடு சமுர்த்தி பயனாளிகள் ஆறுமாதத்திற்கு பின்னர் செலுத்தக்கூடிய வகையிலே பத்தாயிரம் ரூபாயினை வட்டியின்றிய கடனாக சமுர்த்தி வங்கிகளில் பெற்றுக்கொள்ள முடியும். வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து கடனை இரண்டு கட்டமாக வழங்குவதற்கு வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சுகாதார திணைக்களத்தின் அறிவுரைக்கு அமைவாக இப்பணங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர்ந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நெல் விற்பனை செய்ய தயாராக இருக்கும் விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையோடு தொடர்பு கொண்டு தங்களின் நெல்லினை விற்பனை செய்ய முடியும். அத்தோடு இந்த ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச்செய்கைக்கான உர விநியோக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறு போகத்தை மேற்கொள்கின்ற விவசாயிகள் வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து உரத்தினை பெற்றுக்கொள்வதற்கு கமநல திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கனகராயன்குளம் நிருபர்

Wed, 03/25/2020 - 12:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை