மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரன் பொலார்ட் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டெரன் ப்ராவோ ஆறு மாதங்களின் பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, துடுப்பாட்ட சகலதுறை வீரர் ரொவ்மன் பவல் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியில், முழங்கால் உபாதைக்குள்ளான 24 வயதுடைய இளம் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் பெபியன் அலன் உபாதையிலிருந்து மீண்டுள்ள நிலையில், அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

கடந்த வருட இறுதியில் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அதிரடி துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய 23 வயதுடைய மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் சிம்ரொன் ஹெட்மெயர் இறுதியாக அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் மற்றும் ரி-20 சர்வதேச தொடரில் அதிக போட்டிகளில் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

இதன் காரணமாக இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான அணியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் முக்கிய பங்குவகித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லுவிஸ் இலங்கை அணியுடன் தொடரில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

அவர் குறித்த இலங்கை அணியுடனான தொடருக்கான அணி தெரிவிற்காக உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாகவே ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் அணி தேர்வுக்குழு தலைவர் ரோஜர் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெற்ற துடுப்பாட்ட வீரர் ப்ரெண்டன் கிங், வேகப்பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தொடர்ந்தும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம், கிரன் பொலார்ட் தலைமையிலான அணியில், பெபியன் அலென், சுனில் எம்ரிஸ், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், செல்டோன் கொட்ரெல், ஜேஸன் ஹோல்டர், சாய் ஹோப், அல்சார்ரி ஜோசப், பிரெண்டன் கிங், கீமோ போல், நிக்கோலஸ் பூரான், ரொவ்மன் பவல், ரொமாரியோ செப்பர்ட், ஹெய்டன் வோலஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட ரி-20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை