தாய்லாந்தில் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
நகோன் ரச்சசிமா நகரில் ஜக்ரபன்த் தொம்மா என்ற வீரர் கடந்த சனிக்கிழமை தனது படைப்பிரிவு தளபதியை கொன்றுவிட்டு இராணுவ முகாமில் இருந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சந்தேக நபர் வீதிகள் மற்றும் வணிக வளாகம் ஒன்றில் வருகின்ற போகின்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இரவு முழுவதும் அந்த கட்டடத்தில் சிக்கி இருந்த வீரர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதன்போது எட்டுப் பிணைக் கைதிகள் மீட்கப்பட்டதாகவும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர். அவர் வணிக வளாகத்திற்குள் மறைந்திருந்த நேரத்தில் பேஸ்புக் சமூகதளத்தில் பதிவுகளை இட்டுள்ளார். எனினும் துப்பாக்கிதாரியின் பேஸ்புக் பதிவுகளை நீக்கியதாகவும் அவரது கணக்கை முடக்கிவிட்டதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
“மரணம் ஒருவராலும் தவிர்க்க முடியாதது” என்று அவர் முன்னதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான் ஒசா நேற்று அறிவித்துள்ளார். காணி விற்பனை ஒன்றில் தான் ஏமாற்றப்பட்ட கோபத்திலேயே அந்த வீரர் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக பிரதமரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிக துப்பாக்கி உரிமம் பெற்ற நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து இருந்தபோதும் பொதுமக்களை இலக்கு வைத்து இவ்வாறான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெறுவது மிக அரிதான ஒன்றாகும்.
from tkn