நடைபெறவிருக்கும் இரண்டு தேர்தல்களிலும் பொதுஜன பெரமுன கட்சி பெருமளவு தொகுதிகளை கைப்பற்றி வெற்றியீட்டும். இதனூடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி நாட்டை அபிவிருத்தி அடையச்செய்யும் வழிவகைகளை மேற்கொள்ள முடியும் என துறைமுக கப்பற்துறை மற்றும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில் தலைமையில் குருநாகல் மாநகர சபை மண்டபத்தில் (01) நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும்போதே அமைச்சர் இதனைத்தெரிவித்தார். மேலும் பேசுகையில், கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில் நல்லாட்சி எனக்கூறி நாட்டை நாசப்படுத்தியவர்களின் செயற்பாடுகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. தமது சுயநலன்களுக்காக மக்களையும், நாட்டையும் ஏமாற்றியவர்கள் மக்களின் பணங்களை சூரையாடி நல்லாட்சி என்ற பெயரில் மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆட்சி காலத்தில் சுயாதீன விசாரணை குழுவில் தமக்கு வேண்டியவர்களை நியமனம் செய்து எம்மை பழிவாங்கினர்.கடந்த ஆட்சி காலத்தில் என்னை வேண்டுமென்றே பழிசுமத்தி சிறையில் அடைத்தனர்.நோய் காரணமாக நான் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தனர்.
குளியாப்பிட்டி தினகரன் நிருபர்
from tkn