இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.75 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக இளம் வீரர்களுக்காக சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு திங்களன்று 23 ம் திகதி இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் அங்கத்தவர்களினால் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராம அமைப்பினரிடம் இந்த உபகரணத் தொகுதி கையளிக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான பி.வசீகரன் இவ் உபகரணத் தொகுதியை கையளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் இவ்வுதவிகள் வழங்கி வைப்பட்டதாக கழக அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்வுதவித் தொகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக தானியங்கி பந்து வீச்சு இயந்திரம் ஒன்றும் பயிற்சிக்காக கையளிக்கப்பட்டதுடன், 50 கடின பந்து துடுப்பாட்ட மட்டைகள், நூற்றுக்கணக்கான கடின பந்துகள், புள்ளிக்கணிப்பு மட்டைகள், பாதணிகள், தலைகவசங்கள், கையுறைகள் உட்பட பல உபகரணங்கள் உள்ளடங்கியிருந்தன.

இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே. சடாற்சரராஜா, பொருளாளர் கு.தயாசிங்கம், செயலாளர் பா. ஜெயதாசன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் இ.சிவநாதன், செயலாளர் சா.அருள்மொழி, பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது வவுணதீவு பிரதேசத்திலுள்ள பன்சேனை பாடசாலையின் உதைபந்தாட்ட வீராங்கனையின் கல்வி நடவடிக்கைக்காக இ.ரவீந்திரனால் துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை