சிம்பாப்வேயுடன் ஏற்பாடு செய்யப்பட்ட திகதிக்கு முன்னரே கிரிக்கெட் ஆடவுள்ள பங்களாதேஷ்

சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைக்கு (FTP) அமைவாக இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தமது நாட்டுக்கு வரும் ஜிம்பாப்வே அணியுடன் இருவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐந்து ரி 20 போட்டிகளும், ஒரு டெஸ்ட் போட்டியும் கொண்ட இந்த கிரிக்கெட் தொடர்களை மார்ச் மாதத்திற்குப் பதிலாக எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடாத்த தீர்மானம் எடுத்திருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

”சிம்பாப்வே அணி பெப்ரவரி மாதம் பங்களாதேஷ் வருகின்றது.” என அறிக்கை ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரியான நிஸாமுத்தீன் சௌத்ரி சிம்பாப்வே – பங்களாதேஷ் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட திகதிக்கு முன்னர் நடைபெறவிருப்பதனை உறுதி செய்திருந்தார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, இந்த கிரிக்கெட் தொடர்களில் ஏற்பட்டிருக்கும் திகதி மாற்றம் பங்களாதேஷ் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துடன் எந்தவிதத்திலும் தொடர்புபட்டதில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தமது முதல் ஜனாதிபதியான ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் நினைவை ஒட்டி உலக பதினொருவர் கிரிக்கெட் அணிக்கும், ஆசிய பதினொருவர் கிரிக்கெட் அணிக்கும் இடையில் ரி 20 தொடர் ஒன்றினை நடாத்தவுள்ளது. இந்த ரி 20 தொடரினைக் கருத்திற் கொண்டே சிம்பாப்வே – பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் முற்கூட்டியே நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை