ஏழை மக்களுக்காக செயற்படும் சிறந்த வேட்பாளரே எமக்கு கிடைத்திருக்கிறார்

ஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும். அவர் சிறுபான்மை சமூகத்திற்கு என்ன செய்ய போகின்றார் என்ற கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையை மிக இலகுவாக கையாள்பவராக இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் பல வேட்பாளர்கள் உருவாகி பலர் ஜனாதிபதி யாகவும் வந்திருக்கிறார்கள். வேட்பாளர்களாக வருகின்ற போது பல வாக்குறுதிகளை விஷேடமாக தமிழ் மக்களிடையே அள்ளி வீசுகின்றார்கள். வீசப்பட்ட வாக்குறுதிகள் காலம் கடந்து மரணித்து போகின்றன. அவ்வாறான வேட்பாளரை தெரிவு செய்யாமல் உண்மையான அர்த்தபுஷ்டியுள்ள வேட்பாளரை தெரிவு செய்யவேண்டிய கடப்பாடு உள்ளது.

கடந்த காலங்களில் எங்களுடைய மக்களை கொன்று புதைத்து இரத்தக்கறை படிந்தவர்கள் வேட்பாளராக வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேட்பாளர்களை எமது சமூகம் ஆதரிப்பார்களாயின் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்கு தள்ளப்படுவார்கள்.

இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தார்கள். இவற்றுக்கெல்லாம் காரணமான நபர்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறும் யுகம் உருவாகக்கூடாது.

ஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற அனைத்து மக்களையும் சரியாக பார்க்கின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார். அவரை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டி வேட்பாளரை வெற்றியடைய செய்வார்கள் என தெரிவித்தார்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை