எதேச்சதிகாரத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சரியானது எது பிழையானது எது என்று தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளது. கடந்தகாலத்தில்கூட மஹிந்தயா, மைத்திரியா என்கின்றபோது, தமிழ் மக்கள் மைத்திரிபக்கம் சார்ந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மக்களின் நாடித்துடிப்பை எடுத்துப்பார்க்கும்போது, அவர்கள் ஒரு ஜனநாயக யுகத்தை நோக்கிச் செல்வதற்கு விரும்புகின்றார்கள். இராணுவமயப்படுத்தப்பட்ட எதேச்சத்திகாரத்தை நோக்கி தமிழ் மக்கள் விரும்பவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உண்மையில் ஜனநாயக அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்களை இராணுவ மயப்படுத்தப்பட்ட எதேச்சதிகாரத்திற்கு விரும்பமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடையத்தில் எமது மக்களுடன் நாங்கள் கலந்துரையாடுகின்றபோது எமது மக்கள் ஒரு தெழிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். சாராயப்போத்தல்களை அல்லது நாட்கூலிக்கு 1000 ரூபாய் கொடுத்து ஒரு மயக்கமான சூழ்நிலையை வைத்துக் கொண்டு எதேச்சத்திகாரத்தைக் கொண்டுவருவதற்கு சில சுயநல அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் அவ்வாறான சுயநல வாதிகளின் வலையில் தமிழ் மக்கள் விழுந்துவிடமாட்டார்கள்.

எமது தலைமையுடன் நாம் பேசிக்கதைத்து, தீர்க்கமான ஒரு தீர்மானத்தை எடுத்ததன் பின்னர். நாங்கள் உரிய வேட்பார்களுடன் பேசிக் கதைத்து, முடிவுகளை எடுப்போம். அவ்வாறு முடிவுகளை எடுக்கின்றபோது உள்ளதில் நல்லது, உள்ளத்தால் நல்லது எது என்பதை நாங்கள் பார்த்துவிட்டு எமது மக்களுக்கு சில தெழிவு படுத்தல்களை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது.

உரிமையா? சலுகையா? என்று பார்க்கின்றபோது எமது மக்கள் உரிமையின் பக்கம்தான் நிற்பார்கள்.

வியாபாரமாக தமது அரசியலை ஊதாரித்தனமாக செய்கின்றவர்கள் சலுகையின் பக்கம் நிற்பார்கள். அவ்வாறானவர்கள், இன்றைக்கு ஒன்றும், நாளைக்கு வேறொன்றும் சொல்வார்கள்.

நேற்று ஒரு பேச்சுப் பேசியவர்கள் இன்று ஒருபேச்சிப் பேசுகின்றார்கள். தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பல விடையங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அன்று வெள்ளை வானைப்பற்றி உரத்த குரலில் பேசியவர்கள் இன்று அவர்களுக்குச் சாதகமான முறையில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மக்களின் தலையில் வைத்து மிளகு அரைப்பதற்கு எந்த ஒரு சுயநல வாதியும் நினைத்தால் அவர்கள் மக்களிடமிருந்து தூக்கி வீசப்பட்டு, அன்னியப்படுத்தப்படுவார்கள் என்பதுதான் உண்மை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்குரிய தெழிவு படுத்தலை மிக விரைவில் மேற்கொள்ளும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை