அ.இ. பாடசாலை கிரிக்கெட்: சம்பியன் பொத்துவில் மத்திய கல்லூரி அணிக்கு பாராட்டு

அகில இலங்கை பாடசாலை கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனாக வெற்றிசூடிய பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அணிக்கு பாடசாலையில் வரவேற்பளிக்கப்பட்டு, பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கல்வி அமைச்சு நடாத்திய, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அணியினர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அணியினரை வெற்றி கொண்டு தேசியமட்ட சம்பியனாக வெற்றிவாகை சூடினர். இப்போட்டி, கிரியுள்ள விக்கிரமசீலா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நாவுல நாக தேசிய பாடசாலை, பன்னிப்பிட்டிய தர்மபால தேசிய பாடசாலை, தெபராவ தேசிய பாடசாலை, மெதிரிகிரிய தேசிய பாடசாலை, மட்டக்களப்பு மெதடிஸ்த தேசிய பாடசாலை ஆகிய ஐந்து பாடசாலைகளின் மாணவர் அணிகளுடனான கிரிக்கெட் போட்டிகளில் பொத்துவில் மத்திய கல்லூரி மணவர் அணியினர் வெற்றியீட்டி, இம்மகத்தான சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இதன்போது, கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட வெற்றிக் கிண்ணத்தை மாணவர்கள் தங்களது பயிற்றுவிப்பாளர் எம்.எம்.அஸ்மி சகிதம் உத்தியோகபூர்வாகக் பாடசாலைக்கு கையளித்ததாக பொத்துவில் மத்திய கல்லூரி அதிபர் கே.ஹம்ஸா தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித், பொத்துவில் உப-வலயக் கல்விப் பணிப்பாளர் என்.அப்துல் வஹாப், பொத்துவில் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.புகாரி, அதிபர்கள், ஆசிரியர்கள், பொத்துவில் பிரதேச பொது அமைப்புக்களின் நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பெற்றார்கள், மாணவர்கள் ஆகியோர் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

(பாலமுனை விசேட ,அட்டாளைச்சேனை மத்திய நிருபர்கள் )

Sat, 10/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை