இலங்கை தேயிலைக்கு வெளிநாடுகளில் நியாயமான விலை உயர்வினைப் பெற்றுக்கொடுக்க தனது ஆட்சியில் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான பிரசாரக் கூட்டம் 23 ஆம் திகதி மாலை பூண்டுலோயா நகர மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் அரச திணைக்களங்களில் சேவைகளை மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் அபிவிருத்தி செய்வதாகவும், அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவைகளை செய்யும் பொழுது எந்தவோர் அரசியல் தலையீடும் இன்றி சுயமாகத் தீர்வுகளைப்பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச திணைக்களங்களின் செயற்பாடுகளை தனது ஆட்சியில் வலுப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது ஆட்சிக்காலத்தில் நாட்டின் விவசாயத் துறையை ஊக்குவிப்பதில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அதனை செயல்படுத்தி வந்தார். நெல் விவசாயம் மற்றும் தேயிலை உள்ளிட்ட பல விவசாய அபிவிருத்திகளை ஊக்கப்படுத்துவதில் அவரின் செயற்திட்டங்கள் அமைந்திருந்தன. அந்த வகையில் இராசாயன உரங்களுக்கு விலை மானியம் வழங்கப்பட்டது.
ஆனால், அடுத்து வந்த ஆட்சியாளர்கள் முறையான நிர்வாக நடவடிக்கைகளை கொண்டு செல்லத் தவறியதால், மக்களுக்கு சேவை செய்யும் அரச அதிகாரிகள் முறையாக செயல்பட தவறியதால் நாட்டின் பொருளாதாரமும் விவசாயமும் சீரழிவுக்கு உள்ளாகியது.
ஆனால், எனது ஆட்சியில் திறமைமிக்க அரச அதிகாரிகளை நல்ல நிர்வாகிகளாக செயல்படுத்தி மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை முன்னெடுப்பேன்.
நாட்டில் அபிவிருத்திக்கான மாற்றம் ஒன்றை எனது ஆட்சியில் உருவாக்குவேன். நல்ல நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவேன். என் மீது நம்பிக்கை வையுங்கள் எனத் தெரிவித்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வும் அதற்கு அப்பால் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய அபிவிருத்திப் பணிகளையும் செய்து தாருங்கள் என ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் வலியுறுத்தினார். ஆனால், நான் ஆட்சிக்கு வந்தவுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதுடன், அதற்கு அப்பால் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என அவரிடம் உறுதியளித்துள்ளேன்.
தோட்டத் தொழிலை மாத்திரம் நம்பி விடாது அதற்கு அப்பால் சென்று தொழில்களில் ஈடுபடுவதற்குக் கல்வி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்காக தான் தொண்டமானிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"எனது வெற்றியை உறுதி செய்யுங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள்" எனக் கேட்டுக்கொண்ட அவர், நாட்டில் புது யுகம் ஒன்றை மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்குவேன்" எனவும், "தாங்கள் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அல்லர் எனவும் தாங்கள் யுத்தத்தை முடித்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹற்றன் சுழற்சி நிருபர்
from tkn