காரைதீவில் கண்டன பேரணி

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை மதிக்காத பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் கண்டன பேரணி இடம்பெற்றது .

வெள்ளிக்கிழமை( 27) காலை 10 மணியளவில் இந்த போராட்டமானது வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

'சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துக','அனைத்துவிதமான பாரபட்சங்களை ஒழிக்குக' 'சிறுபான்மையினர் மீதான துஷ்பிரயோகங்களை நிறுத்துக' போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைது செய்யகோரியும் இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காரைதீவு சுவாமி விபுலானந்தர் சதுக்கத்திலிருந்து பேரணியாக காரைதீவு பிரதேச செயலகம் வரை சென்று மீண்டும் சுவாமி விபுலானந்தர் சதுக்கத்தை வந்தடைந்தது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப்பிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இந்த கண்டன பேரணியில் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

காரைதீவு குறூப் நிருபர்

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை