பயிற்சிபெற்ற தொழிலாளர் படையணியை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன்

நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் பயிற்சியுடனும் புதிய அறிவுடனும் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்க வேண்டும். இதன்பிரகாரமே தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி என்பன கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.  

குளியாப்பிட்டி நகரை அடிப்படையாக கொண்டு 23,593மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நேற்று (31) ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  

இம்மாதமளவில் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கவுள்ளதுடன் இதன்மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு இரண்டாம் கட்டமாக மாகாண பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும் டெப் கணினி வழங்கப்படும்.  

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பயிற்சியுடனும் புதிய அறிவுடனும் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்க வேண்டும்.

இதன் பிரகாரமே தொழில் கல்வியையும் தொழில்நுட்ப கல்வியையும் கல்வித் திட்டத்தில் இணைத்துள்ளோம். இதன்படி தொழில்நுட்ப கல்வியை பயிற்றுவிப்பதற்கு காணப்படும் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நீக்கும் பொருட்டு இன்று இலங்கையின் முதற்தடவையாக தொழில்நுட்பவியல் தேசிய கல்வியற் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இதனூடாக தொழில்நுட்ப கல்வியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்க முடியும். எனினும் இந்த ஒரு கல்வியற் கல்லூரி மாத்திரம் போதாது.

தற்போது இயங்கும் கல்வியற் கல்லூரிகளிலும் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் பயிற்சியுடன் கூடிய தொழிலாளர் படையணியை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே பயிற்சியுடனும் புதிய அறிவுடனும் கூடிய தொழிலாளர்கள் உருவானால் நாட்டின் பொருளாதாரம் வளம் பெற்று நாட்டின் உற்பத்தி சார் வருமானமும் அதிகரிக்கும். ஆகவே பயிற்சியுடன் கூடிய தொழிலாளர் படையணியை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

Sun, 09/01/2019 - 12:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை