ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை அணி பாகிஸ்தான் பயணம்

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டாது என தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அதற்குப் பதிலாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் அல்லது 20க்கு20 தொடரில் விளையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மாத்திரம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அங்குள்ள பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பதிலாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் அல்லது ரி-20 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது” என அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதற்கு ஒருசில வீரர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், இலங்கை அணி எட்டு நாட்கள் மாத்திரம் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவார்கள்.

தற்போதுள்ள நிலைமையில் இலங்கை அணிக்கு டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதற்காக நாங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கராச்சி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த 8ஆம் திகதி பாகிஸ்தானின் மத்திய பொலிஸ் அலுவலகத்திற்கு சென்று சிந்து மாநிலத்தின் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். போட்டி நடைபெறவுள்ள கராச்சி மைதானத்திற்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து பார்த்தனர். இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணிக்கு விமான நிலையம் முதல் மைதானம் வரை சர்வதேச தரத்திலான முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் உறுதியளித்திருந்தனர்.

ஐந்து பேர் கொண்ட இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்குச் சென்று ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடியிருந்தமை நினைவு கூறத்தக்கது.

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை