நிறைவேற்று அதிகார ஒழிப்பு இப்போது கைவிடப்பட்ட கதை!

தேர்தல் கூட்டணி அமைப்பதிலும் வேட்பாளர் நியமனத்திலும் இன்னுமே முரண்பாடுகளும் இழுபறிகளும்! வேட்பாளர் தெரிவில் அறிகுறிகள் மட்டுமே இதுவரை... திட்டவட்டமான அறிவிப்புகள் இன்னுமில்லை!

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஜே.ஆர். அறிமுகப்படுத்திய நாளில் இருந்து அதை எதிர்த்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,  நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு  இப்போது ஜனாதிபதி ஆட்சி தொடர  வேண்டும் என்று உரத்து வலியுறுத்துகின்ற  கட்சியாக மாறியிருக்கிறது.

னாதிபதித் தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக் கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை.

வேட்பாளர் நியமனத்தில் மாத்திரமல்ல, கூட்டணிளை அமைப்பதிலும் கூட ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கமையான முரண்பாடுகள் மூண்டிருக்கின்றன. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்ட முடியாத நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தடவை ஜனாதிபதித் தேர்தலில் கட்சிகளினால் முன்வைக்கப்படக் கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதித் தேர்தல்களில் பிரதான பிரசாரப் பொருளாக இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு இத்தடவை என்ன நேரப் போகிறது?

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களில் ஒரளவு குறைப்பைச் செய்த அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தை இப்போது 'ஒரு சாபக்கேடு' என்று வர்ணிப்பவராக மாறியிருக்கிறார்.

'எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரக் கூடியவர்கள் 19 வது திருத்தத்தை ஒழிப்பதிலேயே முதலில் கவனம் செலுத்த வேண்டும்' என்று கூட அவர் யோசனை கூறியிருக்கிறார். மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்குமானால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்பதற்குப் பதிலாக 19 வது திருத்தத்தை ஒழிப்பதற்கு தனக்கு ஆணை தருமாறு மக்களைக் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே இப்போது ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.

நான்கரை வருடங்களுக்கு முன்னர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த போது, 'இனிமேல் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் போட்டியிடப் போவதில்லை' என்று பிரகடனம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் உறுதியான ஆதரவாளராக தற்போது மாறியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை, ஜனாதிபதிக்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதையே தனது நிலைப்பாடாக எப்போதும் கொண்டவர் அவர்.

கடந்த காலத்தில் அவர் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து தேர்தல்களின் போது ஒரு ஒப்பாசாரத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தாலும், இனிமேல் அது குறித்து பேசுவதற்கு முன்வரப் போவதில்லை. அதற்கான அரசியல் தேவையும் அவருக்கு இல்லை. தனது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் சார்பில் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் எவரையாவது தேர்தலில் களமிறக்கி ஜனாதிபதியாக்குவதே அவரின் தற்போதைய இலட்சியமாக இருக்கிறது. 19 வது திருத்தத்தை மஹிந்த ராஜபக்ச எதிர்த்தாலும், அது பிரதமர் பதவியை கணிசமானளவுக்கு வலுப்படுத்தியிருப்பதால், தனது குடும்பத்தவர் ஒருவரை ஜனாதிபதியாகக் கொண்ட ஆட்சியில், பிரதமர் பதவியை அடைவதை நோக்கமாகக் கொண்டு அவர் வியூகங்களை வகுக்கிறார். அதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளவுக்கு 19 வது திருத்தத்தின் மீது வெறுப்பைக் கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை ஒருபோதும் மானசீகமாக அவர் விரும்பியதில்லை. அந்தப் பதவியை அடைய முடியாமல் இருப்பதே அவரின் பிரச்சினை. அவரின் கால் நூற்றாண்டு கால தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை கைப்பற்ற முடியவில்லை.

முதலில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை எதிர்த்தும் பிறகு மகிந்த ராஜபக்சவை எதிர்த்தும் இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்ட ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பிறகு போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டார். இடைப்பட்ட காலத்தில் நடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போது அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளர்களை ஆதரித்த அவர், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு கோரிக்கையுடன் ஒத்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதைத் தவிர, அவர் அந்தக் கோரிக்கையை உண்மையாக விரும்பி ஆதரித்தவரில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது சாத்தியப்படாமல் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சியடையக் கூடும். அதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பேசப் போவதில்லை என்று நம்பலாம்.

அதனால், ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) போன்ற சில கட்சிகளைத் தவிர பிரதான கட்சிகள் எதிர்வரும் டிசம்பரில் நடத்தப்பட வேண்டியதாக இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சியே என்று அதிகப் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் குழுக்களும் உரக்கப் பேசிய காலம் போய் அது கைவிடப்பட்ட கதையாக முடியப் போகிறது போலத் தெரிகிறது.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறை மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டது என்று முதலில் கூறப்பட்டது. அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது, தேசியப் பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வைக் காண்பது, தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவது ஆகியவையே அந்த நோக்கங்களாகும்.

பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் இப்போது கைவிடப்பட்ட போதிலும், அவை பல படிமுறைகளிலான செயன்முறைகளாக முன்னெடுக்கப்பட்ட சுமார் இரண்டரை வருட காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கைக்கு தென்னிலங்கையின் முக்கிய அரசியல் சக்திகளின் ஆதரவு அதிகரிப்பதற்கு பதிலாக அந்த ஆட்சிமுறை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தீவிரமடைந்த விசித்திரத்தையே காணக் கூடியதாக இருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பபினர்கள் கூட்டு எதிரணி என்ற பெயரில் மகிந்த ராஜபக்ச தலைமையில் தனியாக செயற்படத் தொடங்கியதும் ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலுவிழக்கத் தொடங்கியது. ஜனாதிபதியாக வந்த சில வாரங்களில் சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை தனதாக்கிக் கொள்ள மைத்திரிபால சிறிசேனவினால் முடியுமாக இருந்த போதிலும் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவரால் இன்று வரை முடியவில்லை.

ராஜபக்ச அணியினர் எடுக்கின்ற நிலைப்பாடுகளை எதிர்ப்பதற்குப் பதிலாக மைத்திரிபால சிறிசேன அணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றுக்கு ஆதரவாக செயற்படும் போக்கையே காண்பித்தார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையின் மூலமாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை கூட்டு எதிரணியினர் கடுமையாக எதிர்த்தனர்.

மைத்திரிபால சிறிசேன அணியினரும் அதே நிலைப்பாட்டையே எடுத்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு சபையின் குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படக் கூடாது; நாட்டின் ஒற்றையாட்சியையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ஆட்சி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஜயவர்தன அறிமுகப்படுத்திய நாளில் இருந்து அதை எதிர்த்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு ஜனாதிபதி ஆட்சி தொடர வேண்டும் என்று உரத்து வலியுறுத்துகின்ற கட்சியாக இவ்வேளையில் மாறியிருக்கிறது.

அது மாத்திரமல்ல, தென்னிலங்கை சமுதாயத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்திருக்கக் கூடிய அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தைத் தீர்மானிப்பதில் தீவிர தேசியவாத சக்திகள் செலுத்தியிருக்கும் செல்வாக்கு, பலம் பொருந்திய ஆட்சியாளர் பற்றிய மருட்சியொன்றை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு ஆதரவான சக்திகளைப் பெருமளவுக்கு பலவீனப்படுத்திருக்கக் கூடும்.

அரசியலமைப்புச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தன்னை பதவிக்கு கொண்டுவந்த அரசியல் சக்திகளையும் சிவில் சமூக இயக்கங்களையும் பலப்படுத்துவதற்குப் பதிலாக தனக்கு எதிராகச் செயற்பட்ட சக்திகளுடன் அணிசேருவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிய விபரீதமான நாட்டத்தின் விளைவே இன்றைய அரசியல் கோலங்கள் ஆகும்.

 

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை