இலங்கை கிரிக்கெட் புதிய யாப்புக்கு ஐ.சி.சி தலைவர் முட்டுகட்டை

விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அழைப்பின் பேரில் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர் மற்றும் ஐ.சி.சியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்புவது குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்தாகவும் இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வருடாந்த கணக்காய்வு அறிக்கையை சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஷாங் மனோகரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, அதன் செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் அவைத் தலைவர் ஷஷாங் மனோகர் அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய யாப்பு, அதன் நிர்வாகம் மற்றும் நிதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், தியகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான யாப்பை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாட்டிலுள்ள சகல விளையாட்டுக்களையும் உள்ளடக்கியதாக அந்த திருத்தம் இடம்பெற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், இலங்கை கிரிக்கெட்டின் புதிய திருத்தத்தை தற்போது பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தியகம கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதற்கு வங்கியிலிருந்து குறைந்த வட்டிக்கு கடனை எடுத்து வருடமொன்றுக்கு ஐ.சி.சியினாலும் சிறிய தொகை பணத்தைப் பெற்றுக்கொள்கின்ற ஒரு திட்டத்தை எம்மால் முன்னெடுக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் தலைவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார். இதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவின் நாக்பூரில் வைத்து ஐ.சி.சியின் அவைத் தலைவர் ஷஷாங் மனோகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை - -நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற 2ஆவது டெஸ்ட் போட்டியையும் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர் மற்றும் ஐ.சி.சியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை