புலனாய்வு தகவல்களை வழங்கியிருந்தால் தாக்குதல்களை தடுத்திருக்கலாம்

விசேட அதிரடிப்படை தளபதி லத்தீப் தெரிவுக்குழுவில் சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் ஏப்ரல் 10ஆம் திகதியே கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்திருந்ததாக விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்தார். அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் ஏப்ரல் 9ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், மேலதிக தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றையதினம் சாட்சியமளிக்கும்போதே லத்தீப் இதனைக் கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாமென அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அனுப்பியிருந்த கடிதத்துக்கு அமைய ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவிலுள்ள விசேட அதிரடிப்படையின் பிரிவு, பிரதமர் பாதுகாப்பு பிரிவிலுள்ள விசேட அதிரடிப்படைப் பிரிவு, பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவிலுள்ள விசேட அதிரடிப்படைப் பிரிவுகளிடம் பாதுகாப்பை உஷார் படுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் மற்றும் அவர்கள் பற்றிய அமைப்புக்கள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் ஏற்கனவே தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தபோதும் அவை எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. குண்டுத் தாக்குதல்கள் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தன. வாராந்தம் நடைபெறும் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்படுவதில்லை.

தம்மையும் அழைக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லையென்றும் லத்தீப் தெரிவித்தார்.

“ஏப்ரல் 20ஆம் திகதி அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார். ஏப்ரல் 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் பரீட்சார்த்தமாக வெடிக்கவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எனது நிலைப்பாட்டை கேட்பதற்காக அவர் என்னைஅழைத்திருந்தார். நான் அப்போது வெளிநாட்டில் இருந்தேன்.

நாடு திரும்பியதும் அழைப்பை ஏற்படுத்துவதாகக் கூறினேன். 19ஆம் திகதி நான் நாடு திரும்பினேன். நாடு திரும்பியதும் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு அழைப்பை ஏற்படுத்தி நாடு திரும்பிய விடயத்தை அறிவித்தேன். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலுள்ள விசேட அதிடிப்படையின் அலுவலகத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று, எனக்குக் கிடைத்த தகவல்களை அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தினேன்” என்றார்.

பயங்கரவாதம், போதைப்பொருட் கடத்தல், ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. விடுதலைப் புலிகள் கூட போதைபொருள் கடத்தல்களைச் செய்துள்ளனர். திலகா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாட்டில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை