நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்

நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை எதிர்காலத்தில் உருவாக்க  வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை 12 வட்டார வேட்பாளர் யு.எல் அப்துல் றஹ்மான் தலைமையில் நேற்று (27) மாலை இடம்பெற்ற புனரமைக்கப்பட்ட வீதிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இன்று நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் அதன் உயர் பீடம் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்களுக்கும் உள்ளாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இன்று ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையின் காரணத்தினால் இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றன.

எதிர்காலத்தில் சுபீட்சமான முறையில் நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அது சிலவேளை எங்களுக்குள்ளே பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு முரண்பட்டுக்கொண்டிருக்காமல் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்ள வழிவகையை தேடவேண்டும்.

கல்முனை பிரச்சினை கூட தற்போது பூதாகரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் கட்சி பேதமின்றி இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் கே.எம். ஏ றஸாக்(ஜவாத்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம் அப்துல் மனாப், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வை.கே றஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன் சுமார் 35 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

பாறுக் ஷிஹான்  

Sun, 07/28/2019 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை