பயிற்சியை நிறைவு செய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு பதவிநிலை
தேசிய அச்சுறுத்தலாக காணப்படும் சட்டவிராத போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்பு துறையினரால் ஆற்றப்படும் சிறப்பான சேவை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் பயற்சிபெற்ற அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமிக்கும் நிகழ்வு, முப்படையின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (22) பிற்பகல் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய பொருளாதார அபிவிருத்தி போன்றே ஒழுக்கமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதற்கும் முப்படையினர் வழங்கும் பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை மற்றும் முப்படையினர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவையை ஜனாதிபதி பாராட்டினார்.
இலங்கை கடற்படையின் வரலாற்றை அபிமானத்துடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடற்படைசார்பில் அன்று முதல் இன்று வரையான காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற அனைத்து வீரர்களையும் நினைவுகூர்ந்தார்.
திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியின் 32 (தொழிநுட்ப), 33 (ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள்) மற்றும் 59வது படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட 89 அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்ததன் பின் பதவிநிலை வழங்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் 04வது துரித தாக்குதல் படகுகளை உயர்வு நிலையில் அமர்த்தி ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியின் பிரதான மைதானத்தில் இடம்பெற்ற பதவி உயர்வு நிகழ்வின் பின் கலைந்து சென்றதுடன், பயிற்சி காலத்தில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு விசேட விருதுகளையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கடந்த சில வருடங்களாக பெற்ற கடின பயிற்சியினூடாக உள்வாங்கிக்கொண்ட உடல் மற்றும் மனஉறுதியை தாய் நாட்டினதும் கடற்படையினதும் வளர்ச்சிக்காக பயன்படுத்தி பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்களென எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக கடற்படைக்கு தமது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இன்று பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, கடற்படை பதவிநிலை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கிழக்கு மாகாண கடற் பிரதேசங்களுக்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் பயிற்சிகளை நிறைவு செய்த அதிகாரிகளின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
from tkn