எமது வீரர்கள் முகங்களை கண்ணாடியில் பார்க்க வேண்டும்

தோல்வி குறித்து- அணியின் தலைவர் டு ப்ளெசிஸ்

உலகக் கிண்ணப் போட்டிகளில் தமது வீரர்கள் முழுமையான அவதானத்துடன் விளையாடவில்லை எனவும், அதன் காரணமாகவே தம்மால் முழுமையான ஆட்டத் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியுடனான தோல்வி குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது

”இப் போட்டியில் எமது திட்டங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறவில்லை. போட்டியின் ஆரம்பத்திலேயே லுங்கி எங்கிடி உபாதைக்குள்ளாகியது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. 330 ஓட்டங்கள் என்பது கடினமாக இலக்காக இருக்கும் என நான் கருதவில்லை. ஆனால், எமது துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு தவறிவிட்டனர்.

இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தில் ஸ்விங் மற்றும் பௌண்சர் பந்துகளை வீசமுடியும் என்று நினைத்து தான் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடாமல் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தோம். அதுமாத்திரமின்றி, நாங்கள் இங்கிலாந்துடனான போட்டியைப் போல இந்தப் போட்டியிலும் வேகப் பந்துவீச்சை நம்பி தான் களமிறங்கியிருந்தோம்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன் நாங்கள் நிறைய விடயங்கள் பற்றி பேசியிருந்தோம். அதிலும் நாணயச் சுழற்சியில் வென்றால் என்ன செய்ய வேண்டும் எனவும், நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டுமா எனவும் கலந்துரையாடினோம். ஆனால், இப் போட்டியில் லுங்கி எங்கிடியின் உபாதையுடன் எமது அனைத்து திட்டங்களும் நிறைவேறாமல் போனது” என தெரிவித்தார்.

பொதுவாக துணைக் கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று முதலில் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்தால் நிச்சயம் பந்துவீச்சில் எதிரணியைக் கட்டுப்படுத்துகின்ற திறமை அவர்களிடம் உண்டு. இறுதியில் அந்த திட்டம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது.

”உண்மையில் இதுவொரு நல்ல ஆடுகளம். ஆனால் நாங்கள் தான் மூன்று துறைகளிலும் எதிர்பார்த்தளவு செய்யவில்லை. இதனால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்தத் தோல்வியை நான் சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளமாட்டேன். அதேபோல, விளையாட்டு உலகைப் பொறுத்தமட்டில் தென்னாபிரிக்கா ஒரு பெருமைக்குரிய நாடாக உள்ளது. எம்மிடம் திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் நாம் தொடர்ந்து வெற்றிக்காகப் போராடுவோம்” என தெரிவித்தார்.

”இந்தப் போட்டியில் ஒருசில துறைகளில் நாங்கள் நன்றாக செய்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்தளவு முடிவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. நான் ஏற்கனவே கூறியது போல இந்த உலகக் கிண்ணத்தில் எந்தவொரு அணியும், மற்றைய அணியை வீழ்த்தும்.

பங்களாதேஷ் அணி மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தது. அவர்கள் இன்னிங்ஸை ஆரம்பித்த விதமும், போட்டியை இறுதி வரை கொண்டு சென்ற விதமும் பாராட்டத்தக்கது. இதனால் தான் 300 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை அந்த அணி குவித்தது.

இந்தியாவுடனான அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது உடைமாற்றும் அறையில் உள்ள எந்தவொரு வீரரும் முழு கவனத்துடன் விளையாடவில்லை. அதன் காரணமாகவே எம்மால் முழுமையான ஆட்டத் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. எந்தவொரு வீரரும் தமது உயர்ந்தபட்ச திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் தமது முகங்களை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அப்போதுதான் என்ன தவறு செய்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

எந்தவொரு வீரரும் தமது திறமையை வெளிப்படுத்தாவிட்டால் உண்மையில் கடுமையான தொணியில் பேசப்படுவார்கள். இவ்வாறு நிறைய சம்பவங்கள் உடைமாற்றும் அறையில் இடம்பெற்றுள்ளன. இதுதான் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டிய தருணம். இங்கிலாந்து அணியுடனான போட்டியிலும் இவ்வாறு தான் நடைபெற்றது. அதேபோல இன்றைய போட்டியிலும் எமது வீரர்கள் தமது முழுமையான ஆட்டத் திறமையை வெளிப்படுத்தவில்லை. அதற்கு மன்னிப்பு கிடையாது என குறிப்பிட்டார்.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை