இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார்

பயங்கரவாத ஒழிப்பு, பிராந்தியத்தின் அமைதிக்கு இணைந்து செயல்பட இரு தலைவர்களும் இணக்கம்

இலங்கைக்கு எதிர்காலத்தில் தேவை யான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார்.

இந்தியத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட நரேந்திர மோடி இரண்டாவது தடவையாகவும் நேற்றுமுன்தினம் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்ததோடு, அவரது அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (31) புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.

ஹைதராபாத் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த நட்புடன் வரவேற்றார்.

சுமுக கலந்துரையாடலை தொடர்ந்து அரச தலைவர்கள் இருவரும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தனது அழைப்பையேற்று பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

மேலும் அண்மையில் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதல் குறித்து இந்தியப் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஒன்றிணைந்து செயற்பட அரச தலைவர்கள் இதன்போது உறுதிபூண்டனர்.

இம்முறை நடைபெற்ற இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று இரண்டாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி, தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்வரும் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

நட்பு நாடுகள் என்ற வகையில் நெருக்கமாக செயற்படும் அரச தலைவர்களாக இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவும் இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.

அதேவேளை பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலைதீவுக்கு செல்லவுள்ளதுடன், மாலைதீவு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் 7ஆம் திகதி மாலைதீவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி 9ஆம் திகதி பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். இலங்கையில் அவர் சில மணி நேரங்கள் தங்கியிருப்பாரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வரும் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Sat, 06/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை