சேதமுற்ற 325 குளங்களை புனரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

வடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களை அண்டிய அநுராதபுரம், பொலன்நறுவை, புத்தளம், குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சேதமுற்றுள்ள 325 கிராமியக் குளங்களை புனரமைக்கும் “எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்” நிகழ்ச்சித் திட்டத்தை துரிதப்படுத்தி, இப் பிரதேசங்களிலுள்ள விவசாய சமூகத்திற்கு நன்மையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இக்கிராமிய குளங்களை அண்டிய மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டமொன்றும் அதனுடன் இணைந்ததாக நடைமுறைப் படுத்தப்படும். இத் திட்டத்தின் நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் “எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்” திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகளை கண்டறிவதற்காக (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.

சர்வதேச பசுமை காலநிலை நிதியம் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,664 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் இத்திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் இவ்வலயங்களிலுள்ள, தொடர்ச்சியாக வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகிவரும் குறைந்த வருமானம்பெறும் சுமார் 15 இலட்சம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 2,450 மில்லியன் ரூபாவை அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. இத்திட்டம் 2024ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவுள்ளது.

 

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை