பிரதான நகரங்களில் வீதியின் தனித்தனி ஒழுங்கையில் பயணிப்பது தொடர்பான விதி முறையை நடைமுறைப்படுத்த, நாளை முதல் இரு வார சலுகைக் காலம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்றைய தினம் (26) பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே, ருவன் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வீதியின் தனித்தனி ஒழுங்கையில் பயணிப்பது தொடர்பான விதிமுறைகளை நடைமுறைபடுத்திருந்தோம் இதன்போது சாரதிகவளிடமிருந்து பாரிய ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் அடிப்படையில், இவ்வாறு வீதியின் தனித்தனி ஒழுங்கையில் பயணிக்கின்ற நிலையில், வீதியில் பயணிப்பது தொடர்பான ஒழுக்கம் பேணப்படுதல் மற்றும் வாகன நெரிசல் குறைக்கப்படுவதோடு விபத்துகள் குறைக்கப்படுவது அவதானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் பிரதான நகரங்களில் மீண்டும் வீதியின் தனித்தனி ஒழுங்கையில் பயணிப்பது தொடர்பான விதி முறையை நடைமுறைப்படுத்த பொலிஸ் தலைமையகத்தினால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர், நாளை (27) முதல் இரு வாரங்களுக்கு, சாரதிகளுக்கு சலுகை காலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த சலுகை காலத்தில் பஸ் வண்டிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், வீதியின் தனித்தனி ஒழுங்கைகளில் பயணிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும் அதனை பின்பற்றுவதற்கும் இக்காலப் பகுதியை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு காணப்படுவதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த சலுகைக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, வீதியின் தனித்தனி ஒழுங்கையில் பயணிப்பது தொடர்பான சட்டத்தை இறுக்கமாக கடைபிடிக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக இதுதொடர்பான கண்காணிப்பில் சிவில் உடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், அது தவிர சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே நாளை (27) முதல் அமுலுக்கு வரும் குறித்த சலுகை காலத்தில் வீதியின் தனித்தனி ஒழுங்கைகளில் பயணிப்பது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து சாரதிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
from tkn