முன் சக்கரம் இல்லாமல் தரையிறங்கிய விமானம்

தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறுக்கு மத்தியில் முன் சக்கரம் இன்றி மியன்மார் விமானம் ஒன்று பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

மியன்மார் நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் மாண்டலே விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நிற்கும் முன் அதன் முன் அடிப்பகுதி ஓடுதளத்தில் உரசியது.

89 பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இன்றி விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கியதற்கு அந்த விமானத்தை இயக்கிய விமானி பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

யங்கூனில் இருந்து மாண்டலே வந்த அந்த விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, தரை இறங்கும் முன்னர், வேகமாக எரிபொருளைப் பயன்படுத்தித் தீர்க்கும் அவசரகால வழிமுறையை விமானி மியாட் பின்பற்றினார்.

விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தபின், அந்த விமானம் நின்றதை அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்டுகிறது.

மியன்மார் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை துணை இயக்குநர் யே டுட் ஆவுங், இதுபற்றி கூறுகையில், “தரையிறக்கத்திற்கு தேவையான கியரை விமானி போடுவதற்கு பல முறை முயன்றும், அது செயல்படவில்லை. ஆனால், விமானத்தின் முன்பக்க சக்கரம் கீழே வரவில்லை. இதையடுத்து விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது” என்றார்.

தரையிறங்குவதற்கு தேவை யான கியர் வெளியே வந்து விட்டதா என்பதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதி செய்வதற்காக விமானி மியாட் மோ ஆங், அந்த விமான நிலையத்தைச் சுற்றி இரு முறை வானில் வட்டமடித்ததாக மியன்மார் நேஷனல் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விமான பயணி சோ மோ கூறுகையில், “விமானம் தரையிறக்கப்பட்டபோது, முன்பகுதி தரையில் உரசியதால் சிறு அளவில், புகை எழுந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தோம். ஆனால், நல்லவேளையாக, யாருக்கும் காயமில்லை” என்று தெரிவித்தார்.

இது ஒரே வாரத்தில் மியன்மாரில் நடக்கும் இரண்டாவது விமானப் போக்குவரத்துக் கோளாறாகும்.

புதனன்று பிமான் பங்களாதேஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து சறுக்கி விலகியதால் 17 பயணிகள் காயமடைந்தனர்.

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை