கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையத்தில் இரண்டு முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ராவணா பலய அமைப்பின் அழைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் பௌத்த மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான அங்குலுகல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர்கள் இருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இன்று (26) மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எதிராக பொலிஸ் தலைமையத்தில் இரண்டு முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராவணா பலய அமைப்பின் அழைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரினால் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவருக்கும் எதிராக ஒரு முறைப்பாடும், பௌத்த மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான அங்குலுகல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரரினால் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக ஒரு முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(ஸாதிக் ஷிஹான்)
from tkn