கல்முனை மாநகரில் கடையடைப்பு, துக்க தினம்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இந்தச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் நேற்று (23) செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், கல்முனை வர்த்தக சங்கம் மற்றும் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக நிலையம் இணைந்து துக்கதினத்திற்கான அழைப்பை விடுத்திருந்தன.

இதனால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வர்த்தக நிலையங்களில் வெள்ளை கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

அரசினால் பிரகடனப்படுத்தபட்டிருந்த துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று கல்முனையிலுள்ள அரச,அரச சார்பற்ற நிறுவனங்களில் காலை 8.30 தொடக்கம் 8.33 வரை மரணித்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அரச அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.இதே வேளை கல்முனையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கல்முனை நகர் பள்ளிவாசல்,பொதுமக்கள் கூடுகின்ற இடங்களான மாநகர சபை,பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.

நற்பிட்டிமுனை விசேட நிருபர்

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை