அரச சேவையில் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

அரசாங்க சேவைகளில் இரண்டுமொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமையளிக்கவுள்ளோம். தமிழ் மொழி பேசுபவர்களுக்காக வழங்கப்படும்,111நியமனங்களுக்கும் மேலதிகமாக இந்த அரசாங்கம் 135பேருக்கு நியமனங்களை வழங்கியுள்ளதென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (01)நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது-

தற்போது சேவையிலுள்ள சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியும் பயிற்றுவிக்கின்றோம். அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக கொழும்பிலும் களனியிலும் வீடமைப்புத் தொகுதிகளை அமைத்து வருகின்றோம். இவ்வருடம் அதன் நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். மொனராகலையிலும் நான்கு மாடி வீடமைப்புத் தொகுதியொன்றை அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக அமைத்து வருகின்றோம்.

நாம் ஓய்வூதியக்காரர்களை கைவிடவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 12பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம். பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கவுள்ளோம். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கியுள்ளோம் என்றார்.

Tue, 04/02/2019 - 12:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை