ஈரானில் வெள்ளத்தில் சிக்கி 47 பேர் உயிரிழப்பு

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. ஒரு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடும் மழை காரணமாக ஈரானில் உள்ள அணைகளில் 95 வீதம் நிரம்பிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உதவி செய்து தரப்படும் என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு தேவையான நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் இருப்பதாக ஈரான் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஈரானின் வெளியுறவுத் துறை தலைவர் ஜாவத் சாரிப் கூறும்போது, “அமெரிக்கா ஈரானுக்குக் கிடைக்க வேண்டிய அவசர உதவிகளை தடுத்துள்ளது. இது பொருளாதார தடை அல்ல, பொருளாதார தீவிரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை